![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2562144.jpeg)
கோலாலம்பூர், மார்ச் 5 – நாடளுமன்ற கூட்டத்தின் போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்த, தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான், அதற்காக பகிரங்கமாக மன்னிபுக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, பேரரசரையும் அதில் சம்பந்தப்படுத்தி பேசியிருந்ததால், அவரிடமும் மன்னிபுக் கோருவதாக, வான் சைபுல் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி நாடாளுமன்ற விவாதத்தின் போது, “ஊழல் என்பது அதிகார துஷ்பிரயோகம். மன்னிக்கவும் பேரரசரே! ஒவ்வொரு வாரமும் அமைச்சரை கூட்டத்திற்கு முன்பு அவர் உங்களை சந்திப்பார்” என்று சைபுல் குறிப்பிட்டிருந்தார். தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் குறித்துதான் சைபுல் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது தெளிவானது.
முன்னதாக, வான் சைபுலை இடை நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன், அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்த மக்களவை தலைவர் வாய்ப்பு வழங்கினார்.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வான் சைபுல் தாம் வெளியிட்ட கூற்றை மீட்டுக் கொண்டதோடு, மன்னிப்பும் கோரியதால், அவரை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை முன் வைத்திருந்த, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாயிட் ஹமிடி அதனை மீட்டுக் கொண்டார்.