![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-03-Jun-2024-09-03-AM-8298.jpg)
மும்பை, ஜூன்-3, ஆசியாவின் மிகம் பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை முகேஷ் அம்பானியிடம் இருந்து மீண்டும் கைப்பற்றியுள்ளார் கௌதம் அதானி.
அதானி குழுமத்தின் தலைவரான அவர், Bloomberg வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11,110 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அம்பானி 10, 900 கோடி டாலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டார்.
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கணிசமாக உயர்ந்த போதே, அம்பானியை அதானி முந்தப் போவது ஏறக்குறையக் கணிக்கப்பட்டு விட்டது.
1988-ல் ஒரு பொருள் வர்த்தக நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அதானி, இன்று இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
தளவாடங்கள், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், பாதுகாப்பு, வேளாண் வணிகம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் 50 நாடுகளில் 70 இடங்களில் அது அமோகமாக செயல்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகவிருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அறிவித்த நாளன்றே, அதானியின் முதலிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதானியும் அம்பானியும் மோடியின் நெருங்கியத் தொழிலதிபர் நண்பர்கள் ஆவர்.
என்றாலும், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி மாறும் என்பதால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிரு இடங்கள் விரைவில் இடமாற வாய்ப்புண்டு.