![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-22-Feb-2024-12-54-PM-8622.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி 22 – கோலாலம்பூர் விமான நிலையம் வாயிலாக, 100 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட சுல்காட்டா வகை ஆமைகளை கடத்தும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
உடையக் கூடிய பொருட்கள் என அறிவித்து பெட்டியில் வைத்து அந்த ஆமைகளை கடத்த முயன்ற உள்நாட்டு ஆடவன் ஒருவனும் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்ட மூன்று சுல்காட்டா வகை ஆமைகளை கடத்த அவன் அந்த யுக்தியை கையாண்டதாக நம்பப்படுகிறது.
நேற்று மாலை மணி நான்கு வாக்கில், மூன்று வெவ்வேறு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அதனை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 வயதான உள்நாட்டு ஆடவன் கைதுச் செய்யப்பட்டதை, PERHILITAN – வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்பு துறை இயக்குனர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.
2010-ஆம் ஆண்டு வனவிலங்கு சட்டத்தின் கீழ் அந்த கடத்தல் விசாரிக்கப்படுகிறது.
சுல்காட்டா ரக ஆமைகள் உலகின் மூன்றாவது பெரிய ஆமை இனமாகும். அவை ஆப்பிரிக்கா பாலைவனத்தை பூர்வீகமாக கொண்டவை என்பதோடு, 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை ஆகும்
அளவு மற்றும் வயதுக்கு ஏற்ப அவை ஒவ்வொன்றையும், ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் அல்லது ஏழாயிரத்து 188 ரிங்கிட் வரை விற்கலாம்.