
கோம்பாக், ஜூலை 31 – தன்னை ‘ஆலோங்’ கடத்திச் சென்றதாக பொய்யான நாடகமாடி, தனது தாயிடம் 30,000 ரிங்கிட் பணத்தை பறிக்க முயன்ற 25 வயதுடைய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசின் (Ibrahim Husin) தெரிவித்ததாவது, தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க 30,000 ரிங்கிட் பணம் வழங்குமாறும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி தாய் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. தனது கடனை அடைப்பதற்காக பணம் பெறும் நோக்கில், சந்தேகநபரே ‘ஆலோங்’ போல் தொலைபேசியில் பேசி, தாயை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, மிரட்டி பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், செலாயாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.



