![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-15-Apr-2024-08-11-PM-4305.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல் 15 – இந்தியப் பெண் தொழில்முனைவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், ‘பெண்’ எனும் புதிய திட்டத்தின் வழி, அமானா இக்தியார் மலேசியா, ஏ.ஐ.எம் (AIM), கூடுதல் RM 5 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருப்பது, பெண்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துகிறது என மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனமான MAICCI-யின் மகளிர் பிரிவுத் தலைவி ஹேமலா தெரிவித்துள்ளார்.
இந்த நிதி பல ஆண்டுகளாக மலேசிய இந்திய மகளிர் தொழில்முனைவர்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
அதன் அடிப்படையில் இத்திட்டத்தை அறிமுகம் செய்த தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர், டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு MAICCI மகளிர் பிரிவு சார்பாக அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பல இந்தியப் பெண் தொழில்முனைவர்கள் தங்களின் வணிகத்தை வலுவூட்டுவதற்கும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் ஆதரவும் வழிகாட்டுதலும், குறிப்பாக நிதி உதவியும் தேவைப்படுகிறது.
இந்நிலையில் இந்த ‘பெண்’ கடனுதவி பெரும் பயனாக அமையும் என்றார் ஹேமலா.
இத்திட்டம் வெற்றிபெற அமைச்சுக்கும் Amanah Ikthiar Malaysia-வுக்கும் உதவ MAICCI எப்போதும் தயாராக உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதி, நாட்டில் உள்ள சிறு இந்திய மகளிர் தொழில்முனைவர்களை உருவாக்கவும், பெண்களின் எதிர்காலத்தை நிலையானதாக உயர்த்தவும் வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, நாடு முழுவதிலும் உள்ள 124 அமானா இக்தியாரின் அலுவலகத்தில் இன்று முதல் இந்த ‘பெண்’ நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஹேமலா நினைவூட்டினார்.