![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/441171887_122147884202166941_1630035428019485824_n.jpeg)
கோலாலம்பூர், மே-18 – இந்தியச் சமூகத்துக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடுகளையும் திட்ட அமுலாக்கங்களையும் கண்காணிப்பதற்காகத் தனியாக செயற்குழுவொன்றை அமைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறுக் கூறியிருக்கிறார்.
பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முறையாகச் செய்து வரும் வரை, அப்படியொரு செயற்குழுவை அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
ஏற்கனவே போதுமான அளவுக்கு செயற்குழுக்கள் இருக்கின்றன; இதில் புதிதாக இன்னொன்றை அமைக்க வேண்டியத் தேவை இருப்பதாக தாம் கருதவில்லை என டத்தோ ரமணன் சொன்னார்.
இந்தியச் சமூகத்துக்கான அனைத்துத் திட்டங்களின் அமுலாக்கங்களையும் கண்காணிக்க அரசாங்கம் சிறப்பு செயற்குழுவொன்றை அமைக்க வேண்டும் என, சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றம் SICC முன் வைத்த பரிந்துரை குறித்து துணையமைச்சர் கருத்துரைத்தார்.
அச்செயற்குழு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி பார்வையின் கீழ் வைக்கப்படலாம் என SICC தலைவர் சார்ல்ஸ் சாந்தியாகோ பரிந்துரைத்திருந்தார்.
MITRA, TEKUN திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்பாட்டையும் அச்செசற்குழு கண்காணிக்கலாம் என கிள்ளான் முன்னாள் MP-யுமான சார்ல்ஸ் கூறியிருந்தார்.