![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-25-Nov-2023-10-38-AM-9319.jpg)
புதுடெல்லி, நவ 25 – நான்கு வகை அரிய நோய்களுக்கு இந்தியாவில் வெற்றிகரமாக மிகக்குறைந்த விலையில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மரபணுச் சார்ந்த குழந்தைகளை தாக்கும் இந்நோய்களுக்கு சிகிச்சை செலவு மிகப்பெரிய அளவில் இருந்த வேளையில் தற்போது அது ஏறக்குறைய 100 விழுக்காடு வரை குறைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு Tyrosinemia type 1 நோய்க்கு வருடத்திற்கு 2.2 கோடி ரூபாயிலிருந்து 6.5 கோடி ரூபாய் வரை சிகிச்சை செலவு பிடிக்கும். இது மலேசிய ரிங்கிட்டுக்கு ஏறக்குறைய 1.3 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.6 மில்லியன் ரிங்கிட்டாகும்.
ஆனால் தற்போது, அதற்கான செலவு, இரண்டரை லட்சம் ரூபாய் அதாவது ஏறக்குறைய 14,000 ரிங்கிட்டுக்குள் அடக்கிவிட முடியும்.
10 வயதுக்கு குறைந்த குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்நோய்க்கான புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து Nitisinone என அழைக்கப்படுகிறது.
இதே போல், கல்லீரலைத் தாக்கும் Gaucher’s நோய், Wilson’s நோய் ஆகிய அரிய நோய்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியோடு மருந்து நிறுவனங்கள் இப்புதிய அவகை மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. வலிப்பை ஏற்படுத்தும் Lennox Gastaut Syndrome நோயும் புதிய வகை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களில் அடங்கும்.
இந்தியாவில் இருக்கின்ற 13 அரிய வகை நோய்களுக்கான மிகக்குறைந்த விலையிலான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க கடந்த ஓராண்டுத் தொடங்கி அங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், ஏறக்குறைய 100 மில்லியன் பேர், அரிய வகை நோய்களால் அவதிபட்டு வருகின்றனர் என புள்ள விவரங்கள் காட்டுகின்றன.
ஆகையால் இதுபோன்ற குறைந்த செலவிலான சிகிச்சை மருந்துகள் அவர்களுக்கு மிகப்பெரிய விடிவெள்ளியாக அமையும் என நம்பப்படுகிறது.