![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-19-Mar-2024-08-10-PM-401.jpg)
கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசிய இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு இலக்கை அடைய பிரதமரின் தலைமையில் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை குழுவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்குழவுக்கு இலக்கவியல் அமைச்சர் கோபின் சிங் இணை தலைவராகவும் பிற அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் தலைமைச் செயளாளர்கள் அங்கம் பெறலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார் தொடர்பு அமைச்சின், ஊடக மற்றும் பொது தொடர்பு பிரிவின் இயக்குனர் டத்தோ சிவபாலன்.
இதற்கு முன்பு பிரதமர் துறையால் வரையப்பட்ட Malaysian Indian Blueprint எனும் இந்திய பெருந்திட்டமே போதுமானது என்றும் இன்னொரு மறுஆய்வு அதற்கு தேவையில்லை என்றும் அவர் கூறியதோடு அதன் அமலாக்கத்தை உறுதி செய்ய இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை குழு அவசியம் என்றார்.
மித்ரா சிறப்பு அமைச்சரவை குழுவின் ஒருங்கிணைப்பு செயலகமாக செயல் பட வேண்டும். அது மட்டுமின்றி அதன் செயல்பாடு 100மில்லியன் ரிங்கிட்டை பகிர்ந்தளிக்கப்படுவதாக மட்டும் இருக்கக்கூடாது.
நாட்டின் இலக்கிற்கு ஏற்ப இந்திய சமூக மேம்பாட்டுக்கான அனைத்து கொள்கை வரைவுகளுக்கும் மித்ரா ஒரு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட வேண்டும்.
இந்திய சமூகத்தின் கோரிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புக்கு ஈடு செய்யும் வகையில் நடப்பில் உள்ள கொள்கைகள் உள்ளனவா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் புதிய கொள்கைகள் வரைவதில் பங்களிக்க வேண்டும்.
மலேசிய ஐந்தாண்டு திட்டம் மற்றும் அரைதவணைக்கான மறுமதிப்பீடுகளுக்கு சிறப்பு அமைச்சரவை குழுவுக்கு தரவுகளை தரும் செயலகமாக மித்ரா செயல்பட வேண்டும்.
அதே வேளையில் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை குழுவை முழுமையாக்கும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு சார்பற்ற தலைவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், தொழில் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சமூக தொடர்பு செயற்குழுவை அமைக்க வேண்டும் எனவும் டத்தோ சிவபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.