
கோலாலம்பூர், செப்-10-இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் வன மற்றும் நிலத் தீ, எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை சமாளிக்க அந்நாட்டுக்கு உதவ மலேசியா முன்வந்துள்ளது. அதன் தொடர்பில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Datuk Seri Arthur Joseph Kurup அந்நாட்டுக்குக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளது .
ஜூலை 8 ஆம் தேதி பாலியில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியாக அந்த உதவி அமைகிறது. தீத் தடுப்பு மற்றும் ஆரம்பக்கட்ட தீயணைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
எல் நினோ மற்றும் தென்மேற்குப் பருவமழையால் ஏற்படும் வெப்பமான, வறண்ட வானிலை தீ அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சரவாக்கில் புகைமூட்டம் மோசமடைவதற்குக் காரணமாகக் கூறப்படும் அண்டை நாட்டின் திறந்தவெளி எரிப்பு குறித்து ஆசியான் செயலகத்திடம் மலேசியா அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவுள்ளதாக இதற்கு முன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எதிர்காலத்தில் இத்தகைய காற்றும் தூய்மைக்கேட்டுப் பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை அவசியம் என வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



