
சுலாவேசி, ஜூலை-31 – இந்தோனேசியாவில் 23 அடி நீளமுள்ள இராட்சத மலைப்பாம்பு ஒன்று, 35 வயது இளைஞரை முழுமையாக விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜூலை 27-ஆம் தேதி சுலாவேசி தீவில் உள்ள காட்டு வழி கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவு கேளிக்கை மையத்திற்குச் சென்று குடித்து விட்டு அதிகாலை 3 மணியளவில் காட்டுப் பகுதி வழியாக நடந்தே அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனால், விடிந்தபிறகும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தார் கலவரமடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தான், தோட்டத்திற்கு அருகில் நகரவே முடியாமல் வயிறு உப்பிய நிலையில் கிடந்த 7 மீட்டர் நீள மலைப்பாம்பையும், அதற்கு அருகில் அந்த இளைஞரின் காலணிகளையும் கிராம மக்கள் கண்டறிந்தனர்.
சந்தேகமடைந்த அவர்கள் பாம்பின் வயிற்றைக் கீறிப் பார்த்தபோது, உள்ளே காணாமல் போன இளைஞரின் சடலம் முழுமையாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மனிதர்களை மலைப்பாம்பு முழுமையாக விழுங்குவது மிகவும் அரிதான ஒன்று என்பதால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



