Latestமலேசியா

இரண்டாவது ஜோகூர் பாலத்தில் சட்டவிரோத u-turn எடுத்த சிங்கப்பூர் காரோட்டியால், 4 வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி

இஸ்கண்டார் புத்ரி, மே-10- சிங்கப்பூரில் பதிவுச் செய்யப்பட்ட சிவப்பு மாசெராத்தி சொகுசு கார், சட்டவிரோத U-turn செய்ததால், இரண்டாவது ஜோகூர் பாலத்தில் 4 வாகனங்கள் விபத்தில் சிக்கின.

நேற்றிரவு 7 மணிக்கு ஏற்பட்ட அவ்விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தின் போது, சிங்கப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த அக்காரோட்டி, திடீரென, அனுமதியில்லாத இடத்தில் u-turn செய்தார்; அதில் அவரின் கார் சாலைத் நடுவில் தடுப்பை மோதியது.

அது மோதிய வேகத்தில் சாலைத் தடுப்பு இரும்புகள் எதிர் திசைக்குப் பறந்துசென்று, அவ்வழியே வந்த 26 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் மேல் விழுந்தன.

இதனால் தூக்கி வீசப்பட்டு சாலையோரமாக விழுந்த 26 வயது அவ்விளைஞர், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.

அவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சேமிப்புப் பெட்டியும் தூக்கி வீசப்பட்டது. அது அவ்வழியே வந்த 2 மோட்டார் சைக்கிள்களை மோதியது. இரு ஓட்டுநர்களும் அதிர்ஷ்டவசாமாக காயமின்றி உயிர் தப்பினர்.

மாசெராத்தி காரின் செயலால் கோபமுற்ற சில சாலைப் பயனர்கள், போலீஸ் வருவதற்கு முன் ஹெல்மட்டால் அக்காரோட்டியை தாக்கினர்.

அம்மோதலில் அவரின் சொகுசு காரும் சேதமடைந்தது. ஆபத்தாக வாகனமோட்டி மரணம் விளைவித்ததன் பேரில் விசாரணை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!