![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-18-at-2.26.21-PM-1-780x470.jpeg)
கோலாலம்பூர், மார்ச் 18 – அரசாங்கத்தின் முதன்மைத் தரவுத் தளம் PADU-வில் இதுவரை 52 லட்சத்து 20 ஆயிரம் மலேசியர்கள் மட்டுமே பதிந்துக் கொண்டிருக்கின்றனர்.
மொத்த மக்கள் தொகையில் அது வெறும் 17% மட்டுமே.
PADU அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகி விட்டதுடன் ஒப்பிடும் போது, இது மிக மிக குறைவான ஓர் எண்ணிக்கையாகும்.
குறைவானவர்களே அதில் பதிந்துக் கொண்டிருப்பது, PADU அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை பாதிக்கும் என்பதே அரசாங்கத்தின் கவலையாகும்.
காரணம், இந்த தரவுத் தளத்தில் சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு தான், இலக்கு வைக்கப்பட்டோருக்கான உதவிகள் அவர்களைச் சென்றடைவதைய உறுதிச் செய்ய முடியும்.
அதோடு, அடிதட்டு மக்களும் அரசாங்கத்தின் அனுகூலங்களை அனுபவிக்க முடியும்.
ஆனால், மூன்றாவது மாதத்தை நெருங்கும் நிலையிலும், பதிந்துக் கொண்டோரின் எண்ணிக்கை ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பது கேள்விகளை உண்டாக்கியுள்ளது.
ஏராளமானோர் PADU-வில் பதியாயமல் இருப்பதற்குக் கூறும் காரணங்களில் முக்கியமானவை, பயனர்களுக்கு குறிப்பாக வயதானோருக்கு வசதிப்பட இருக்கவில்லை என்பதும், அடையாள உறுதிச் செய்யல் மிகவும் தாமதமாக இருப்பதுமே.
அதோடு, ஒரே தரவுத் தளத்தில் தனிநபர்களின் அனைத்து விவரங்களும் வைக்கப்பட்டிருப்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் மக்கள் மத்தியில் ஐயங்கள் எழவே செய்கின்றன.
PADU-வில் பதிந்துக் கொள்வதற்கு கடைசி நாளாக மார்ச் 31-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 3 கோடி மலேசியர்களையும் அதில் பதிய வைக்கும் இலக்கு நிறைவேறுவது அசாத்தியமே என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆக, அக்காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.