![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/arrested.png)
கொழும்பு, ஏப்ரல் 26 – இலங்கையில் குழந்தைகளைக் கடத்தி மலேசியா மூலமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்த கும்பலின் முக்கியப் புள்ளி கைதாகியுள்ளார்.
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அந்நபர், கொழும்பு Bandaranaike அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைதுச் செய்யப்பட்டார்.
இலங்கைக் குடிநுழைவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிரிட்டனின் Daily Mirror பத்திரிகை அச்செய்தியை வெளியிட்டுள்ளது.
76 வயது அந்த இலங்கைத் தமிழரை சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் கண்ட அந்நாட்டு போலீஸ், இரகசியமாக அவரைப் பின் தொடர்ந்து அவரின் நடவடிக்கைகளை அணுக்கமாக கண்காணித்து வந்தது.
அப்படி கண்காணித்ததில், ஏப்ரல் 22-ஆம் தேதி நடுத்தர ஆடவர் மற்றும் அவரின் மகன் ஆகியோருடன் சந்தேக நபர் மலேசியா புறப்படுவதற்காக Bandaranaike விமான நிலையம் வந்திருப்பதை போலீஸ் கண்டறிந்தது.
எனினும், பிடியில் சிக்க வைப்பதற்காக எந்த சந்தேகமும் வராமல் அவர்களை விமானத்தில் அனுப்புவது போல் அனுப்பி, மலேசிய குடிநுழைவுத் துறைக்கு இலங்க தகவல் தெரிவித்து விட்டது.
KLIA-வில் வந்திறங்கிய அம்மூவரும் தடுத்து வைக்கப்பட்டு 2 நாட்களுக்கு விசாரிக்கப்பட்ட போது தான், அவர் சிறுவனைக் கடத்தி இங்கு விட வந்திருப்பது அம்பலமானது.
இதையடுத்து, புதன்கிழமை அம்மூவரும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டனர்.
2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 தமிழ் சிறார்கள் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு கடத்தி வரப்பட்டதாக அந்த குடிநுழைவு மூத்த அதிகாரி கூறினார்.
அப்படி கடத்திக் கொண்டு வரப்பட்டவர்களில் 13 சிறார்கள், மலேசியக் கடப்பிதழைப் பயன்படுத்தி பிரிட்டன் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இங்குள்ள ஏழைக் குடும்பங்களை அணுகி, அவர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களின் பிள்ளைகளின் பிறப்புப் பத்திரம் உள்ளிட்ட விவரங்களை வாங்குவதை அக்கடத்தல் கும்பல் கச்சிதமாக செய்து வந்திருக்கிறது.
அந்த விவரங்களைப் பயன்படுத்தி, கடத்திக் கொண்டு வரப்பட்ட சிறார்களின் கடப்பிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு அக்கும்பல் நேர்த்தியாக காய்களை நகர்த்துவதை மலேசிய போலீசாரே முன்னதாக அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.