![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-08-Dec-2023-12-45-PM-1624.jpg)
கோலாலம்பூர், டிச 8 – இவ்வாண்டு ஜனவரி தொடங்கி கடந்த நவம்பர் மாதம் வரை குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 58,774 சட்டவிரோத குடியேறிகளும் 289 முதலாளிகளும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 9,000-த்திற்கும் மேற்பட்ட நடவடிக்கையின்போது அந்த சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். சட்டவிரோத குடியேறிகளை முதலாளிகள் வேலைக்கு வைத்திருக்கக்கூடாது என்பதில் குடிநுழைவுத்துறை உறுதியாக இருந்ததால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ருஸ்லின் ஜூசோ கூறினார். இவ்வாண்டு இதுவரை 30,000-த்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதோடு சட்டவிரோத குடியேறிகளை முதலாளிகள் வேலைக்கு வைத்திருப்பது மற்றும் அவர்களை வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்தினாலும் அது குற்றம் என கோத்தா ராயா வர்த்தக தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதனிடையே கோத்தா ராயா வர்த்தக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று குடிநுழைவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 330 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.