கோலாலம்பூர், டிச 9 – உதவித் தொகை பெறப்பட்ட டீசல் எண்ணெயை கடத்தியதில் சப்பந்தப்பட்ட எண்ணெய் கொள்கலன் கப்பல் ஒன்றை சிலாங்கூர், போர்ட் கிள்ளானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 14.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித் தொகை வழங்கப்பட்ட 138,982 லிட்டர் டீசல் எண்ணெய்யுடன் ,குழாய்கள் மற்றும் இதர சாதனங்களும் கொள்கலன் கப்பலிருந்து பறிமுதல் செய்யப்பட்தாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார். அந்த நடவடிக்கையின் போது கடப்பிதழ் வைத்திருந்த ஆறு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
உதவித் தொகை பெற்ற டீசல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கடத்தலை தடுப்பதற்காக இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட 68 சோதனை நடவடிக்கையில் 73. 8 மில்லியன் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு இந்த நடவடிக்கையின்போது 240 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கண்டறிவதற்காக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சுடன் இணைந்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஹசானி கசாலி தெரிவித்தார்.