![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-11-Feb-2024-10-16-AM-2792-1.jpg)
புதுடெல்லி, பிப்ரவரி 11 – தென் இந்திய உணவு வகைகள், அவற்றின் அறுசுவைக்காக பல கோடி மக்களால் விரும்பப்படுகின்றன.
அதில் மிகவும் முக்கியமானது, கடந்த பல நூற்றாண்டுகளாக, கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளைக் கொண்டுள்ள, மொரு மொரு தோசையும் ஒன்றாகும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும், எங்கெல்லாம் இந்தியர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தோசை கட்டாயம் இருக்கும்.
அதற்கு சிறந்த சான்றாக, பயண மற்றும் உணவு வழிகாட்டி தளமான “தெ டேஸ்ட் அட்லஸ்” (The Taste Atlas) வெளியிட்டுள்ள உலகின் சிறந்த பான்கேக்குகள் பட்டியல் திகழ்கிறது. அந்த பட்டியலில், தோசை பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
மிருதுவான அமைப்பும், செழுமையான சுவையும் கொண்ட மெல்லிய அப்பம் என தோசையை “தெ டேஸ்ட் அட்லஸ்” பாராட்டியுள்ளது.
ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை ஆட்டி அல்லது அரைத்து தயாரிக்கப்படும் தோசை, தனித்துவமான தங்க நிறத்தையும், தவிர்க்க முடியாத முறுகல் சுவையையும் தருகிறது.
இந்தியா முழுவதும் தோசையை சாப்பிடலாம். எனினும், தமிழ்நாடு தான் அதன் பூர்வீகம். கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே தோசை கண்டுபிடிக்கப்பட்டதாக, தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன என “தெ டேஸ்ட் அட்லஸ்” தனது இணைய பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வேளையில், மசாலா உருளைக்கிழங்கு, வெங்காயம், மற்றும் கடுகு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட மசாலா தோசை, “தெ டேஸ்ட் அட்லஸ்” பட்டியலில் 12-வது இடத்தை பிடித்துள்ள வேளை ; அந்த பட்டியலில் பிரான்ஸ், பிரிட்டானியாவைச் சேர்ந்த மெல்லிய க்ரீப்ஸ் (Crepes) அப்பம் முதல் இடத்தையும், ஆஸ்திரியாவின், கைசர்ஸ்மார்ன் ” (Kaiserschmarrn) உணவு இரண்டாவது இடத்தையும், சீனாவின் ஜியான்பிங் (Jianbing) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன