கோலாலம்பூர், ஜூன் 10 – உள்நாட்டு பச்சை அரிசியின் உச்சவரம்பு விலை இந்த அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக இறுதிவடிவம் காணப்படும் என விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு (Mohamad Sabu) கூறியிருக்கிறார். இதர அமைச்சுகளுடன் நடத்தப்படும் இறுதி கலந்துரையாடல் மூலம் உச்சவரம்பு விலை குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தற்போது கலந்துரையாடல் நிலையில்தான் இந்த முடிவு உள்ளது. விலை மாற்றங்கள் தொடர்பாக நான்கு அமைச்சுகளுடன் சேர்ந்து கலந்துரையாடல் நடத்தவேண்டியுள்ளது.
விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அமைச்சு, உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு ஆகிய அமைச்சுகளுடனும் பேச்சு நடத்த வேண்டியிருப்பதாக முகமட் சாபு தெரிவித்தார்.
இப்போதைக்கு இன்னும் முடிவு காணப்படவில்லை. இந்த விவகாரம் இன்னம் பேச்சு வார்த்தை நிலையிலேயே இருப்பதால் அக்டோபர் மாதத்திற்குள் இறுதி முடிவு காணப்படும் என விவசாய தோட்டக்கலை மற்றும் விவசாய சுற்றுலா கண்காட்சியை தொடக்கிவைத்த பின் முகமட் சாபு தெரிவித்தார். தற்போது உள்ளூர் பச்சரிசி ஒரு கிலோவுக்கு 2 ரிங்கிட் 60 சென்னாகவும் அல்லது 10 கிலோ 26 ரிங்கிட்டாகவும் விற்கப்படுகிறது. குறைந்தபட்சம் இதன் விலை ஒவ்வொரு கிலோவுக்கும் 25 சென் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.