![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-07-Dec-2023-08-55-AM-5245.jpg)
கோலாலம்பூர், டிச 7- கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்வோர் அடிப்படை மலாய் மொழியில் பேசும் திறன் கொண்டிருப்பது அவசியம். மலாய் மொழியில் இலக்கிய புலமை கொண்டிருக்க வேண்டும் என நான் கூறவில்லை எனக் பதிலளித்துள்ளார் உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில்.
அண்மையில் ஜோகூரில் கடப்பிதழை புதுப்பிக்க வந்த ஒரு பெண்ணையும் அவரது மகளையும் மலாய் மொழியில் பேசாததால், குடிநுழைவுத் துறை அதிகாரி ஏசியதால் அவ்விவகாரம் சர்ச்சையானது.
அச்சமயத்தில் மலேசியர்கள் அடிப்படை மலாய் மொழி தெரிந்திருப்பது கட்டாயம் என அமைச்சர் அந்த அதிகாரியை தற்காத்துக் கூறியது பின்னர் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. பலரும் அமைச்சர் சைபுதீனை சாடியிருந்தனர்.
கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கும் ஒரு பிரஜை மலாய் மொழியில் ஆளுமையை கொண்டிருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென ‘Lawyers for Liberty’ லாவ்யேர்ஸ் ஒப் லிபிரிட்டி அமைப்பின் இயக்குனர் ஜெய்த் மாலேக்கும் உள்துறை அமைச்சர் சைபுதீனுக்கு நினைவுறுத்தியிருந்தார்.
மலாய் மொழி தேர்ச்சி பற்றி தாம் கூறிய கருத்தை கடப்பிதழ் விண்ணப்பிப்பதற்கு தொடர்புப்படுத்திய விமர்சனங்களை சைபுதீன் சாடினார்.
X சமூக வலைத்தளத்தில் சுருக்கமாக பதிவிட்ட அவர் அனைத்து மலேசியர்களும் மலாய் மொழியில் இலக்கியப் புலமை கொண்டிருக்க வேண்டும் என தாம் ஒருபோதும் கூறவில்லை என சைபுதீன் தெரிவித்திருக்கிறார். மலாய் மொழி தேசிய மொழியாகும். எனவே, இதில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படாது என அவர் கூறினார். இந்த அடிப்படை விஷயத்தை மலேசியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களிடம் தொடர்பு கொள்வதற்கு இலக்கிய புலமை அவசியமில்லையென சைபுதீன் விவரித்தார். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடிதப் பரிமாற்றங்களில் மலாய் மொழி பயன்படுத்துவதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கட்டாயப்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியர் ஒருவர் மலாய் மொழியில் பேச முடியாதபோது அதிகாரிகள் சந்தேகப்படுவதற்கு காரணம் இருப்பதாகவும் சைபுதீன் தெரிவித்தார்.