![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-15-Mar-2024-09-13-PM-8788.jpg)
கோலாலம்பூர், மார்ச் 15 – எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை ஏற்றுநடத்துவதற்கு மலேசியா முன்வந்தால் அதனால் நாடு நிதி மற்றும் பொருளாதார பின்விளைவை எதிர்நோக்கும் என விளையாட்டுத் துறையின் இரண்டு பிரபலங்களான முன்னாள் ஓட்டப்பந்த வீரர் கரு .செல்வரத்னம் மற்றும் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் சாந்தோக் சிங் கருத்துரைத்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியை கருத்திற்கொள்ளும்போது காமான்வெல்த் போட்டியை நடத்துவதை உணர்வுள்ள மனிதர் எவரும் ஏற்கமாட்டார்கள் என 1964 ஆம் ஆண்டு தோக்யோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஒட்டத்தில் கலந்துகொண்டவருமான கரு. செல்வரத்னம் தெரிவித்தார்.
நமது தேசிய கடன் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் காமன்வெல்த் போட்டி நடத்துவதை அரசதாங்கம் நிராகரித்து மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களில் அந்த பணத்தை செலவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்கு பதில் காமான்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் மலேசியாவுக்கு வாய்ப்பு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கரு. செல்வரத்னம் இதனை தெரிவித்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவது பண விரயமாகும் என பிரபல காற்பந்து விளையாட்டாளருமான சாந்தோக் சிங்கும் தெரிவித்துள்ளார்.
காமான்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக நாட்டின் பொருளாதாரத்தை தியாகமாக்கிவிடக்கூடாது என அவர் கூறினார்.
1998 ஆம் ஆண்டு காமான்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தியதில் 11.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக 2004 ஆம் ஆண்டில் அப்போதைய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் தெரிவித்திருந்ததையும் சாந்தோக் சிங் சுட்டிக்காட்டினார்.