![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-10-Dec-2023-10-48-AM-1159.jpg)
பெட்டாலிங் ஜெயா, டிச 10 – காஸாவில் நடந்துவரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு ஐ.நா-வின் பாதுகாப்பு மன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது மலேசியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தைத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இந்த போக்கு இஸ்ரேல் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் காஸாவில் உள்ள குழந்தைகள் கொல்லப்படுவதை தற்காக்கும் வகையில் இருப்பதாக அன்வார் சாடியுள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்தும் எதிர்த்தும் வருகின்ற நிலையில் அமெரிக்கா இது போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது மனித உரிமையை மதிக்காமல் இருப்பது போல் உள்ளது.
அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அந்த வகையில் போர் நிறுத்தத்தை நிராகரிப்பதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்றும் அமெரிக்காவின் இந்த முடிவு ஏற்றுகொள்ள முடியாது எனவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காஸாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா மட்டும் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.