![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-04-Mar-2024-05-29-PM-8201.jpg)
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 – நாட்டின் கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாக, கோம்பாக், காராக் டோல் கட்டணங்களை இரத்துச் செய்யுமாறு, துவான் இப்ராஹிம் துவான் மான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
கோம்பாக், பெந்தோங் காராக் மற்றும் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் சாவடி என நான்கு டோல் கட்டண சாவடிகளை வாகனமோட்டிகள் கடந்து செல்ல வேண்டியுள்ளதே, அங்கு போக்குவரத்து நெரிசல் மோசமடைவதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
அதனால், பயனர்களின் சுமையைக் குறைக்க, அரசாங்கம் அவற்றில் இரு டோல் கட்டண சாவடிகளை மட்டுமே பயன்படுத்தலாம்.
ஒன்று நெடுஞ்சாலையில் நுழையும் டோல் கட்டண சாவடி. மற்றொன்று நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் போது உள்ளது என்றாரவர்.
இதர இரு டோல் கட்டண சாவடிகளை அரசாங்கம் அகற்ற வேண்டும். கோம்பாக் மற்றும் காராக் டோல் கட்டண சாவடிகள் இருக்க வேண்டிய அவசியமில்லை என துவான் இப்ராஹிம் துவான் மான் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
முன்னதாக, திரங்கானு மாநிலத்தில், டோல் கட்டண சாவடிகளை முற்றாக அகற்ற வேண்டுமென, குவாலா திரங்கானு பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் அம்ஜாட் முஹமட் ஹசிம் முன் வைத்திருந்த பரிந்துரையையும் துவான் இப்ராஹிம் துவான் மான் வரவேற்றார்.