![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/6c6a8bda-a255-44a0-8a78-b9408320f731.jpg)
சுங்கை பூலோ, மார்ச் 25 – சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனைக் குடியிருப்பின் 16-வது மாடியில் இருந்து விழுந்து, 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணி அளவில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது சிறுவனின் தாய், தந்தை என மொத்தக் குடும்பமே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.
திடீரென விழித்துக் கொண்ட தாய், வரவேற்பறையில் முழுவதுமாக திறந்திருந்த ஜன்னலோரத்தில் பையன் நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துப் போனார்.
பதறியடித்துக் கொண்டு அவர் ஓடி வருவதற்குள், மகன் விழுந்து விட்டான்.
சிறுவன் கீழே விழுந்து இறந்துக் கிடப்பதைக் கண்டு போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.
சிறுவனது சடலம் சவப்பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைக்கு திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டாலும், 4 உடன் பிறப்புகளில் கடைக்குட்டியான அவனது மரணத்திற்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.
விசாரணைக்காக, 30 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் தந்தையிடம் இருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.