![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-14-Mar-2024-10-20-AM-6504.jpg)
கோலாலம்பூர், மார்ச 14 – அண்மையில் டெலிகிராமில் எடிசி சியாசட்டில் பதிவிடப்பட்ட அறிக்கையில் குண்டர் கும்பல் ஒன்று ஏற்பாடு செய்த இரவு விருந்தில் தாம் கலந்துகொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை DAP யின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் மறுத்துள்ளார்.
சங்கங்களின் பதிவகத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சமூக இயக்கம் ஒன்று அந்த விருந்தை ஏற்பாடு செய்ததாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் விளக்கம் அளித்தார்.
நிதி திரட்டுவதற்காக சீன அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கமான ஒன்றாகும் என அவர் கூறினார்.
கோலாலம்பூர் DAP தலைவர் தான் கோக் வை, கெபோங் நாடாளுமன்ற உறுப்பினர்
லிம் லிப் இங் ஆகியோருடன் அந்தோனி லோக்கும் பெரிய மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட காணொளி ஒன்றை எடிசி சியாசட் நேற்று பதிவிட்டிருந்தது.
மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற குண்டர் கும்பல் இயக்கத்தின் அந்த இரவு விருந்து நிகழ்வில் அந்த இயங்கத்தின் சின்னமும் 44 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் காணப்பட்டது.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த இரவு விருந்து நிகழ்வு நடைபெற்றதாக இணையத்தள பதிவேட்டிற்கு தெரிவித்த விளக்கத்தில் லிம் லிப் இங் சுட்டிக்காட்டியுள்ளார் .
அந்த விருந்தில் கலந்துகொண்டதில் என்ன தவறு என்றும் அவர் வினவினார். புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக வாணிக மற்றும் தொழிலியல் சங்கம் அந்த இரவு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக இதற்கு முன் ‘Sin Chew Daily’ தகவல் வெளியிட்டது.