குவாலா கங்சார், நவம்பர் 29 – மூன்று வாரங்களுக்கு முன், 14 லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள நகைகளை திருடிக் கொண்டு கம்பி நீட்டிய, மூன்று ஆடவர்களுக்கு எதிராக, இன்று பேராக், குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 52 வயது குணசீலன், 29 வயது அட்ரியன் ராஜ், 35 வயது ஆர். ஆனந்தன் எனும் அம்மூவரும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
அம்மூவரும், இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் இதர அறுவருடன் சேர்ந்து, 26 வயது சோங் யோங் செங் மற்றும் டான் காங் சியாட் ஆகியோருக்கு சொந்தமான 14 லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள பல்வேறு நகைகளை கொள்ளையிட்டதாக நம்பப்படுகிறது.
நவம்பர் ஆறாம் தேதி, காலை மணி 9.40 வாக்கில், குவாலா கங்சார், ஜாலான் டத்தோ மஹாராஜா லேலாவிலுள்ள, கார் நிறுத்துமிடத்தில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அம்மூவரையும் இன்று 20 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை, டிசம்பர் 29-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
இதனிடையே, அதே வழக்கு விசாரணையின் போது, உடலில் போதைப் பொருளை செலுத்திய குற்றத்திற்காக, குணசீலன் மற்றும் ஆனந்தனுக்கு எதிராக ஈராயிரத்து 500 ரிங்கிட் அபராத்தை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.
இம்மாதம் ஏழாம் தேதி, அவர்கள் கைதுச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது போதைப் பொருள் உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.