Latestமலேசியா

கெவின் மோரைஸ் கொலை வழக்கு ராணுவ மருத்துவர் குணசேகரன் உட்பட அறுவரின் மேல்முறையீடு டிசம்பரில் விசாரணை

புத்ராஜெயா. நவ 7 – எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் டி.பி.பி கெவின் மோரைஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ மருத்துவர் உட்பட 6 பேரின் முறையீட்டு மனு மீதான விசாரணையை மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த வாரம் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், மேல் முறையீட்டு பதிவுகளை படிக்க அவகாசம் தேவை என்பதால் வழக்கை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த ஒத்திவைப்புக்கான தேதிக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் டுசுகி மொக்தார் இணக்கம் தெரிவித்தார். இந்த ஒத்திவைப்புக்கு மூவர் கொண்ட அமர்வு நீதிமன்றத்திற்கு தலைமையேற்ற நீதிபதி ஹடாரியா சையட் இஸ்மாயில் அனுமதி அளித்தார். இந்த முறையீட்டுக்கு இதுவே கடைசி ஒத்திவைப்பாகும். இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 4, 7 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும் என ஹடாரியா சையட் இஸ்மாயில் கூறினார்.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஆர். ‘டினிஸ்வரனுக்காக ஆஜராகும்படி வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்தை நீதிமன்றம் நியமித்துள்ளது. முன்னாள் ராணுவ மருத்துவர் ஆர் குணசேகரன் சார்பில் வழக்கறிஞர் எம். சிவானந்தன், எஸ் ரவிச்சந்திரன் சார்பில் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங், ஏ.கே.தினேஷ் குமாருக்கு புர்ஹானுடின் அப்துல் வாஹித்,
எம் விஸ்வநாத் சார்பில் அபிஃபுடின் அஹ்மட் ஹபிஃபி, எஸ் நிமலன் சார்பில் அமீர் ஹம்சா அர்ஷாத் ஆகியோர் ஆஜராகினர். கெவின் மோரைசை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம்தேதி அந்த அறுவருக்கும் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அந்த அறுவரும் கெவின் மோரைசை கொலை செய்யும் பொதுவான நோக்கத்தை கொண்டிருந்ததால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா தீர்ப்பளித்தபோது கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!