![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/judge-gavel-court-orders.jpeg)
கோலாலம்பூர், மே 15 – சீன நாட்டு பெண் ஒருவரிடமிருந்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டை கொள்ளையிட்டதாக, ASP உட்பட ஐந்து போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், கார்ப்ரல் பதவி வகிக்கும் 39 வயது அனுவார் சுலைமான், 35 வயது முஹமட் ஜைடி ஜமலுடின், 28 வயது முஹமட் அட்ராபில் அட்லான் ரோஸ்லான், 39 வயது அஹ்மாட் ரோஹாபிஸ் அப்துல் ராணி உட்பட ASP பதவி வகிக்கும் 41 வயது முஹமட் பைசோல் இஸ்மாயில் ஆகிய அந்த ஐவரும் தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி, மாலை மணி 5.30 வாக்கில், தலைநகர், ஜாலான் துன் ரசாக்கிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஜாங் சென்சுவான் எனும் சீன நாட்டு பெண்ணிடமிருந்து, அவர்கள் ஒரு லட்சத்து 40 ரிங்கிட் பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அவர்கள் அனைவரையும், தலா எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் இன்று விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் 20-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.