
கங்கார், ஆகஸ்ட் 21 – பெர்லிஸ் கங்கார் புக்கிட் லாகியிலுள்ள வீரமாகாளியம்மன் கோவில் இடிக்கப்பட்ட விவகாரம் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையே தவிர, அரசியல் அல்லது இன, மத உணர்வுகளுடன் தொடர்புடையது அல்ல என பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலுடனும் தொடர்பில்லை என்றும், மலேசியா சட்டங்கள் உள்ள நாடு என்பதால் அனைவரும் விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, மற்றவர்களின் அல்லது பொது நிலத்தை ஆக்கிரமித்து வீடு அல்லது வழிபாட்டுத் தலம் அமைப்பதை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து பெர்லிஸ் மாநில அரசை விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த முகமட் அஸ்ரி, மக்கள் சட்டத்தை மீறுவதை ஆதரிப்பதற்குப் பதிலாக விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றார்.
மலேசியாவில் சட்டப்படி கட்டப்பட்ட பல கோவில்கள் அமைதியாக செயல்பட்டு வருகின்றன என்றும், மத நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை என்பது சட்டத்தை மீறுவதற்கான உரிமை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்



