![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-29-at-4.49.14-PM-780x470.jpeg)
கோலாலம்பூர், மார்ச் 29 – சமூக நலத்துறையின் பராமரிப்பில் உள்ள 1,474 குழந்தைகளில் மொத்தம் 133 பேருக்கு தங்கள் தாயின் அடையாளம் தெரியவில்லையென மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்திருக்கிறது. அந்த எண்ணிக்கையில், 43 பேர் மலேசிய குடிமக்கள்,
67 பேர் அடையாளம் காணப்படவில்லை, எஞ்சியோர் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் என அமைச்சு சுட்டிக்காட்டியது. அடையாள ஆவணங்களைக் கொண்டிருக்காத தனது பராமரிப்பில் உள்ள குழந்தைகளை தேசிய பதிவுத்துறையில் சமூக நலத்துறை தாமதமாக பதிவு செய்துள்ளது. அந்த பிள்ளைகள் பிறப்புப் பத்திரங்களை பெறுவதற்கு உதவும் நோக்கத்தில் தேசிய பதிவுத்துறையுடன் சமூக நலத்துறை ஒத்துழைத்து வருவதாக மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக நல இல்லங்களில் இருந்துவரும் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் குடியுரிமை விவகாரத்தை தெரிவிக்கும்படி Beruas பக்காத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் Ngeh Koo Ham எழுப்பிய கேள்விக்கு அமைச்சு தெரிவித்த பதிலில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆதரவற்ற சிறார்கள் இல்லம் , சிறார் சீர்த்திருத்த பள்ளி , Tunas bakti பள்ளி உட்பட 37 ஆதரவற்ற இல்லங்களை மகளிர், குடும்பம் மற்றும் சமூகநல மேம்பாட்டுத்துறை அமைச்சு நடத்தி வருகிறது. இந்த சமூக இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு பிறப்புப் பத்திரங்கள் கிடைப்பதை அமைச்சு உறுதிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.