![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/tea.jpeg)
புது டெல்லி, மே-15, தேநீர் மற்றும் காப்பி பிரியர்கள் கேட்க விரும்பாத ஒன்றைக் கூறி இந்திய மருத்துவ ஆராச்சியாளர்கள் நல்ல எண்ணத்தில் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
டீ மற்றும் காப்பியை அளவுக்கு அதிகமாக அருந்துவதால் உடல்நலத்துக்கு தான் கேடு என்பதை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் ICMR மீண்டும் தெளிவாகப் பதிவுச் செய்துள்ளது.
மத்திய நரம்பு மண்டலத்தையும் உடலியல் சார்புநிலையையும் தூண்டக்கூடிய Caffein, தேநீர் மற்றும் காப்பியில் அதிகமுள்ளது.
எனவே, Caffeine பயன்பாட்டை ஒரு நாளைக்கு 300mg என்ற அளவோடு நிறுத்திக் கொள்வது தான் உத்தமம் என அது சுட்டிக் காட்டியது.
என்னதான் அவ்விரு பானங்களுக்கும் அடிமையாகிக் கிடந்தாலும், சாப்பிடுவதற்கும் முன்பும் பின்பும் அவற்றை அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது என்றும் ICMR ஆலோசனைக் கூறியது.
உணவு உட்கொள்வதற்கு முன்பும் பின்பும் டீ – காப்பி அருந்துவது உலகளவில் பெரும்பாலானோருக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது.
இது தவிர்க்கப்பட வேண்டும்.
குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியாவது விட வேண்டும்.
காரணம், உடம்பில் இரும்புச் சத்து உறிஞ்சுதலைக் குறைக்கக் கூடிய tannin எனும் பொருள் டீ – காப்பிகளில் உண்டு.
Tannin-கள் வயிற்றில் இரும்புடன் பிணைக்கப்படுகின்றன; இதனால் உடல் இரும்பை சரியாக உறிஞ்சுவதை கடினமாக்குகிறது.
இது தேவையில்லாமல் இரும்புச் சத்து குறைபாடு , இரத்த சோகை போன்ற உபாதைகளில் போய் முடியும் என ICMR அறிக்கை எச்சரித்துள்ளது.
அளவுக்கதிகமாக காப்பி அருந்துவது உயர் இரத்த அழுத்தப் பிரச்னை, இருதயக் கோளாறு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.
டீ- காப்பி பிரியர்களுக்கு இது ‘கெட்ட’ செய்தி தான் என்றாலும், உயிர் முக்கியம் என்பதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம் என ICMR கூறுகிறது.