
கோலாலம்பூர், ஜூன்-24 – 2029-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், சாலைப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 300- ரிங்கிட்டிலிருந்து 500- ரிங்கிட்டாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதே தவிர, மக்களின் மீது சுமையை ஏற்றுவதையோ அல்லது அரசின் வருவாயை அதிகரிப்பதையோ நோக்கமாகக் கொண்டதல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.
இது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் (சட்டம் 333) மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு இணங்கவே செய்யப்படுகிறது.
அபராதம் 300-ரிங்கிட்டிலிருந்து 500-ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது, விதிமீறலில் ஈடுபடும் அனைவருக்கும் இயல்பாக 500 ரிங்கிட் அபராதம் அல்லது (compound) விதிக்கப்படும் என்று பொருள்படாது.
அபராதம் விதிக்கப்படக்கூடிய (compound) குற்றங்களைப் பொறுத்தவரை, இந்தத் திருத்தமானது அபராதத் தொகையின் அதிகபட்ச வரம்பை உயர்த்துகிறது.
குற்றம் ஒன்றுதான்; ஆனால், தண்டனையானது காலத்திற்கேற்றதாகவும், குற்றத்தைத் தடுப்பதில் அதிகச் செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று இன்று மக்களவையில் சாலைப் போக்குவரத்து (திருத்த) மசோதா 2026-ன் இரண்டாம் வாசிப்பின்போது அந்தோனி லோக் தெரிவித்தார்.



