Latestமலேசியா

சித்திரையில் உருமாற்றத்தின் சக்தியாக உயர்வோம்! – டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – பிறந்திருக்கும் குரோதி வருட சித்திரைப் புத்தாண்டு நம் எண்ணங்களுக்கு வலிமை சேர்த்து, உருமாற்றத்திற்கு வழிகோலட்டும் என தொழில்முனைவர் மேம்பாடு – கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்தியுள்ளார்.

தனி மனிதனின் மாற்றம், ஒரு தலைமுறையின் மாற்றம்.

எனவே, ஒவ்வொருவரும் இச்சமுதாய உருமாற்றத்தின் உந்துச் சக்தியாக வலிமை கொண்டு செயல்பட வேண்டும்;

மற்ற சமூகத்தினருக்கு ஈடாக பொருளாதார பலம் பொருந்தியவர்களாக உயர்வதற்கு, குறிப்பாக தற்கால இளைஞர்கள் உருமாற்றத்தின் பலம் பொருந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

அவர்களின் முயற்சிகளுக்கு கூடுதல் ஆதரவு சேர்க்கும் வண்ணம் தொழில்முனைவர் மேம்பாடு – கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் உள்ள குறிப்பிட்ட சில ஏஜென்சிகள் மூலம் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியத் தொழில்முனைவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவியை 60 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கியது, இந்தியப் பெண் தொழில்முனைவர்களுக்கு அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் வழி இன்னொரு 50 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படிருப்பது நம் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த முன்னெடுப்புகள் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒதுக்கீடுகளை பயன்படுத்தி, நம் இந்திய தொழில்முனைவர்கள் தத்தம் வியாபாரங்களை அடுத்தக்கட்ட உயர் நிலைக்கு மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் மாபெரும் சக்தி படைத்தவர்களாக உயர்வு காண வேண்டும்.

முழு நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக செயல்பட்டால், நம் சமூகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் விடியல் வெகுதூரமில்லை என தாம் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ரமணன் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!