![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-06-01-PM-63.jpg)
பேங்கோக், பிப்ரவரி 13 – சிறைத் தண்டனை அனுபவித்து வரும், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, கூடிய விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக, அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, இவ்வார இறுதி வாக்கில் அவர் சிறையிலிருந்து வெளியேறலாம் என கூறப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு கடந்து வாழ்ந்த தக்சின், கடந்த சில மாதங்களுக்கு தாயகம் திரும்பியதை அடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
எனினும், அவர் சிறையில் அடைக்கப்பட்டு இன்னும் ஆறு மாதங்கள் ஆகாத நிலையில், தற்போது அவர் விடுவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் முன்னதாக விடுவிக்கப்படவுள்ள 930 கைதிகளில், அந்த 74 வயது முன்னாள் மான்செஸ்டர் சிட்டி உரிமையாளரும் அடங்குவார் என அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தாவீ சோட்சோங் கூறியுள்ளார்.
தக்சின் 70 வயதுக்கு மேற்பட்ட அல்லது உடல் நலம் குன்றியவர்கள் பட்டியலில் இருப்பதால், ஆறு மாதச் சிறைத் தண்டனைக்கு பின்னர் அவர் தானியங்கி முறையில் விடுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வரும் சனிக்கிழமைக்கு பின்னர் அவர் எந்நேரத்திலும் விடுதலை ஆகலாம்.
எனினும், அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவாரா உட்பட இதர விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.