![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/kedahh_1716699573.jpg)
அலோர் ஸ்டார், மே-26 – கெடா, அலோர் ஸ்டாரில் 11 மாதக் குழந்தைக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் வைத்தே அதனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வந்த ஜோடி தலைமறைவாகி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அப்பெற்றோரின் இயலாமை பிரதமரின் கவனத்திற்குச் சென்ற நிலையில்,
அவ்விருவரையும் தொடர்புக் கொள்ள ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
கைப்பேசியில் அழைத்தாலும் அவர்கள் அழைப்பை எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
35 வயது அவ்வாடவரின் வீட்டைக் கண்காணித்ததில் அவர் அங்கில்லை என தெரிய வந்திருப்பதாக, Seberang Kota Kuala Kedah-வில் உள்ள மசூதியொன்றைச் சேர்ந்தவர் கூறினார்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அந்நபரின் தாயார் மட்டுமே அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் அங்கு தனியாக இருப்பதாகச் சொன்னார்.
எனவே அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
நாட்பட்ட நுரையீரல் பாதிப்பால் அவதியுறும் மகனை, சுவாச உதவிக் கருவியுடன் மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு தாயும் தகப்பனும் கொண்டுச் சென்றது கடந்த ஞாயிற்றுக்கிழமை வைரலானது குறிப்பிடத்தக்கது.