மலாக்கா, மார்ச் 17 – புனித ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் உணவு உட்கொண்டதன் பேரில் மலாக்காவில் இதுவரை அறுவர் பிடிபட்டுள்ளனர்.
20 முதல் 60 வயது வரையிலான அவர்கள் மலாக்கா தெங்கா, ஜாசின், அலோர் காஜா உள்ளிட்ட இடங்களில் சிக்கினர்.
அவர்களில் 20 வயது இந்தோனீசிய இளைஞனும் ஒருவன் என மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் ரஹ்மாட் மரிமான் சொன்னார்.
மேல் நடவடிக்கைக்காக மலாக்கா இஸ்லாமியத் துறை JAIM-க்கு வரச் சொல்லும் உத்தரவு கடிதங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வேளையில், ஆயர் குரோவில் உள்ள மாமாக் கடையொன்றில் இரு சுவைபான பைகளுடன் சிக்கியக் கட்டுமானத் தொழிலாளி, அதிகாரிகள் கேட்ட போது, அவை அருகில் வேலை செய்யும் நண்பர்களுக்காக தாம் வாங்கிச் செல்பவை என மழுப்பியிருக்கின்றான்.
இப்படி நோன்பை கடைப்பிடிக்காமல் ‘மட்டம்’ போடும் பலர், அதிகாரிகளிடம் வசமாக சிக்கும் போது, சூடு தாங்க முடியவில்லை, அதனால் தான் குடித்தோம், சாப்பிட்டோம் என சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.
இதனிடையே, ரமலான் நோன்பை மதிக்காத உணவக நடத்துனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஹ்மாட் எச்சரித்தார்.
Drive thru உணவகங்களும், உணவு கொண்டுச் செல்லும் p-hailing ஓட்டுநர்களும் கூட நோன்பு நோட்காதோருக்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கடந்தாண்டு நோன்பைக் கடைப்பிடிக்காத காரணத்தினால் மலாக்காவில் மொத்தமாக 96 பேர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.