![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/c57e4b0b-c560-4264-85e5-a24a07fb3f5a-780x470.jpg)
பினாங்கு, நவ 24 – நேற்று பினாங்கில் செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து பாட அனுமதிக்கப்படாததோடு அதன் பதாதைகளில் திருவள்ளுவர் படத்தையும் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்க செயல் என பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் தெரிவித்திருக்கின்றனர்.
அந்த இரு பாடல்களும் நமது இந்திய பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் மொழியின் பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் மட்டுமின்றி அதனை பின்பற்றுவது அரசியல் அமைப்புச் சட்டத்தில் நமக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையும் கூட. அதனை தடை செய்ய யாருக்கும் இங்கு உரிமை இல்லை என சுந்திரராஜுவும் குமரனும் கூறினர்.
இச்சம்பவம் பற்றி அறிந்தவுடன் மாநில கல்வி இடைக்கால இயக்குனரிடம் தான் தொடர்புக் கொண்டு பேசியபோது இது பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக சுந்தரராஜு வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார். இதில் யாராவது தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.