![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-05-Dec-2023-03-32-PM-7740.jpg)
நீலாய், டிசம்பர் 5 – லேகாஸ் – காஜாங் – சிரம்பான் நெசுஞ்சாலையில், தென் மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில், செந்தூல் சாலை கட்டண சாவடியில், பேருந்து ஒன்று சாலை தடுப்பை மோதித் தள்ளியதில், எட்டு ‘FRU’ படை வீரர்கள் காயமடைந்தனர்.
நேற்று மாலை மணி 5.25 வாக்கில், அந்த பேருந்து செராஸிலிருந்து சிரம்பான் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக, நீலாய் போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.
அந்த போலீஸ் பேருந்துக்கு முன்னே பயணித்த லோரி ஒன்று திடீரென இடது சாலையிலிருந்து வலது சாலைக்கு நுழைந்ததே விபத்துக்கான காரணம் என நம்பப்படுகிறது. அந்த லோரியை மோதுவதில் இருந்து தவிர்க்க முற்பட்ட பேருந்து ஓட்டுனர், சாலை தடுப்பை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அவ்விபத்தில் காயமடைந்த எண்மர், சிரம்பான் துவான்கு ஜபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து ஓட்டுனர் உட்பட இதர எண்மருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவ்விபத்து தொடர்பில், விசாரணை தொடர்கிறது.