![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-05-Dec-2023-09-57-AM-4194.jpg)
சென்னை, டிச 5 – கடந்த 2 நாட்களாக சென்னையை மையமிட்டிருந்த மிச்சாங் புயல், தற்போது சென்னையைக் கடந்து ஆந்திராவுக்கு விலகிச் சென்றுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான இந்த மிச்சாங் புயல், தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரப் பகுதிகளை தாக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்தப் புயல் கொண்டு வந்த கனமழையால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போயுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், ஆங்காங்கே வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.
சாலைகளில் முளங்கால் முதல் இடுப்பளவு வரையிலும் தண்ணீர் ஏறியிருந்தது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமான நிலையத்தின் ஓடுதளத்திலும் மழைநீர் தேங்கி நிற்பதால், வந்திறங்கிய விமானங்களில் இருந்து பயணிகள் இறங்கி செல்ல முடியாத நிலையும், விமானங்கள் புறப்பட முடியாத சூழலும் உருவானது. பல விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.
மிச்சாங் புயலைத் தொடர்ந்து தமிழகத்தில் பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.