![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/mask.jpg)
கோலாலம்பூர், ஜூன்-11 – சேவை முகப்புகளில் சற்று நேரத்திற்காவது சுவாசக் கவசங்களைக் கழற்றுமாறு பொது மக்களை போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
அங்கு குற்றச்செயல்கள் ஏற்படும் பட்சத்தில் முகங்களை அடையாளம் காண அது பெரிதும் துணையாக இருக்கும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறினார்.
அலுவலுக்காக வரும் ஒவ்வொரு தனிநபரும் சேவை முகப்புகளில் சுவாசக் கவசத்தைக் கழற்ற வேண்டும் என அனைத்து வளாகங்களும் நிபந்தனை விதிக்க வேண்டும்.
பொட்டலங்கள், தளவாடங்கள் போன்றவற்றை அனுப்புவதற்காக வருவோருக்கும் அந்நிபந்தனை பொருந்தும் என்றார் அவர்.
பாதுகாப்புக்காக அவ்வாறு செய்வதில் தவறில்லை என அவர் சொன்னார்.
புத்ராஜெயாவில் உள்ள சுற்றுலா-கலை-பண்பாட்டுத் துறை அமைச்சில் (Motac) கடந்த வாரம் வெடிகுண்டு புரளி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து கருத்துரைத்த போது, ருஸ்டி அவ்வாறுக் கேட்டுக் கொண்டார்.
வாடிக்கையாளர்களின் முகங்களுக்கு முக்கியத்துவம் தரும் முகப்புகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்படுவதும் ஊக்குவிக்கப்படுகிறது.
விசாரணைக்குத் தேவைப்படும் போது முக அடையாளத்தை அது இலகுவாக்கும் என அவர் கூறினார்.
இவ்வேளையில் Motac-கில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளி தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் வரைபடமும் இறுதிச் செய்யப்பட்டு வருவதாகக் டத்தோ ருஸ்டி கூறினார்.