
ஜாசின், ஜூன் 10- தனித்து வாழும் தாயான 51 வயது பெண் ஒருவர் ஜாசின் , கம்போங் உம்பாயில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் இறந்து கிடந்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்த 19 வயது மகன் தனது தாயார் லத்திபா முகமட் யாசின் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
தண்ணீர் குழாய் ஓடிக்கொண்டிருந்த நிலையில், கழிப்பறையில் தனது தாய் அசைவற்று கிடப்பதைக் கண்டதாகவும், பின்னர் அண்டை வீட்டாரிடம் தகவல் தெரிவித்ததாக ஆயர் கெரோவில் உள்ள தனியார் கல்லூரில் படித்துவரும் அந்த இளைஞர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிற்கு வருகை புரிந்த அவர்கள் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், கழிப்பறையின் நெருக்கடியான சூழல் காரணமாக, பாதிக்கப்பட்டவரை வெளியே கொண்டுச் செல்வது கடினமாக இருந்ததால் தீயணைப்புத் துறையின் உதவி நாடப்பட்டது.
இறந்தவர் நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மருத்துவமனைக்குச் சென்று வந்துகொண்டிருந்ததாக அண்டை வீட்டுக்காரரான நொரானி என்பவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அவருக்கு லேசான பக்கவாதம் மற்றும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய தண்டுவட வட்டு நழுவல் பிரச்னையும் ஏற்பட்டிருந்தது.
இறந்தவர் அன்றாட வேலைகளுக்கும் எல்லா இடங்களுக்கும் செல்வதற்கும் நண்பர்களின் உதவியை பெரிதும் நம்பியிருந்தார் என்றும் கூறப்பட்டது.



