
கோலாலம்பூர், ஜூலை 27-ஓசியானியா வனுவாட்டு நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் 2 மில்லியன் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், 12 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர், சந்தேகநபர்களுக்கு சுமார் 560,000 ரிங்கிட் தொகையை வழங்கிய பின்னர் டாங் வாங்கி மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் DSP, ASP பதவியைச் சார்ந்த போலீஸ் அதிகாரிகளும் மற்றும் பிற போலீஸாரும் உள்ளடங்குவர்.
விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய பணத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிஷ்னர் சசாலி ஆடம் (Assistant Commissioner Sazalee Adam) உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம், கடந்த பிப்ரவரியில் காஜாங்கில் சீன நாட்டவர்களிடம் 50,000 டெதர் (Tether) கிரிப்டோகரன்சி (cryptocurrency) அதாவது மெய்நிகர் நாணயம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை ஒத்ததாகும்.
அந்த வழக்கிலும் 12 போலீஸார் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இதுவரை அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.



