குளுவாங், மே 21 – ஜோகூர், குளுவாங், ஜாலான் லங்சாட்டிலுள்ள, வர்த்தக வளாகம் ஒன்றில், ரொக்கப் பணத்தை திருடி விட்டு தப்பிச் சென்ற ஆடவனை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
நேற்று தினம் மாலை மணி 4.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக, குளுவாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் பாஹ்ரின் முஹமட் நோ தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வைரலாகியுள்ள வேளை ; கடை ஒன்றில், ரொக்கப் பணத்தை பறிகொடுத்த 40 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு நபர் ஒருவரிடமிருந்து புகார் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் பாஹ்ரின் சொன்னார்.
அச்சம்பவத்தில், ஈராயிரம் ரிங்கிட் களவுப் போனதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருப்பு தொப்பியும், முகமூடியும், அரைக்கால் கால்சட்டையும், டீ சட்டையும் அணிந்திருக்கும் ஆடவன் ஒருவன், அப்பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால், அவ்வாடவன் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.