![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-03-at-11.24.34-AM.jpeg)
ஜோகூர் பாரு, டிச 3 – 2,770க்கும் மேற்பட்ட பள்ளிப் பிள்ளைகள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் ஜொகூரில் சுங்கை கிம் கிம் ஆற்றில் 2019ஆம் ஆண்டில் தூய்மைக் கேடு ஏற்படுத்திய லோரி ஓட்டுனர் N. மாரிதாஸ் மற்றும் P Tech Resources நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுச் சூழல் துறையின் அனுமதியின்றி லோரியிலுள்ள கழிவுப் பொருட்களை கிம் கிம் ஆற்றில் கொட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட N. மாரிதாசிற்கு கூடியபட்ச அபராதமாக ஒரு லட்சம் ரிங்கிட் விதிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. காற்று தூய்மைகேட்டின் அபாயம் ஏற்படுத்தியதை சுற்றுச் சூழல்துறையின் தலைமை இயக்குனருக்கு தெரிவிக்கத் தவறியது உட்பட எட்டு குற்றங்களை ஒப்புக்கொண்ட P Tech Resources நிறுவனத்திற்கு 320,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 40,000 ரிங்கிட் என மொத்தம் 8 குற்றச்சாட்டுகளுக்கு 320,000 ரிங்கிட் அந்த நிறுவனத்திற்கு அபராதமாக தீர்ப்பளிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் ஜோகூர், கிம் கிம் ஆற்று நீரில் ஏற்பட்ட நச்சு சுற்றுப்புற தூய்மைக்கேட்டினால் பல பள்ளிப்பிள்ளைகள், சிற்றுண்டி சாலையை நடத்தியோர் தலை சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தியினால் மயக்கம் அடைந்தனர். இந்த சம்பவத்தினால் சுமார் 2,775 பேர் பெரும்பாலும் பள்ளிப் பிள்ளைகள் மருத்துவமனக்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு கிம் கிம் ஆற்றுக்கு அருகேயுள்ள 110 பள்ளிகளும் மூடப்பட்டன.