ஜோகூர் பாரு, மார்ச் 16 – ஜோகூர் பாருவில் குடியிருப்பு பகுதிகளிலுள்ள ஐந்து விடுகளில் சிவப்பு வர்ணத்தை வீசி சேதப்படுத்தியது மற்றும் மிரட்டல் குறிப்புகளை வெளியிட்டது தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை மணி 3.38 அளவில் தமது வீட்டின் வேலிப் பகுதி நெடுகிலும் சிவப்பு வர்ணத்தை ஊற்றிய சம்பவம் மற்றும் மிரட்டல் குறிப்பு வைத்துச் சென்றதன் தொடர்பில் அவ்வீட்டின் உரிமையாளரிடமிருந்து புகார் பெறப்பட்டதை தொடர்ந்து ஜோகூர் பாரு தென் போலீஸ் நிலையத்தை சேர்ந்த குழுவினரால் 37 வயதுடைய அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதாக தென் ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் ‘ACP Raub Selamat’ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து இரண்டு கை தொலைபேசிகள், சாவி கொத்துகள், புரோட்டோன் கார் சாவிகள் மற்றும் சிவப்பு வர்ணத்தில் எழுதப்பட்ட சிங்கப்பூர் தொலைபேசி எண்ணும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தவிர ஒரு மலேசி கடப்பிதழ், கையுறைகள், போலி வாகன எண் பட்டைகள், சிவப்பு வர்ணம் ஊற்றப்பட்ட பிளாஸ்டிக் போத்தலும் பறிமுதல் செய்ப்பட்டதாக ‘ACP Raub Selamat’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதன் மூலம் வெளிநாட்டு வட்டி முதலை கும்பலின் கைப்பாவையாக செயல்பட்டு ஜோகூர் பாரு நகர்களில் உள்ள வீடுகளில் சிவப்பு வர்ணங்களை எறிந்துவந்த 5 சம்பவங்களுக்கு போலீசார் தீர்வு கண்டுள்ளதாக ‘Raub Selamat’ தெரிவித்தார். .