![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-06-31-PM-1863.jpg)
கோலாலம்பூர், டிசம்பர் 1 – பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாயக்கிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக 1.52 மில்லியன் ரிங்கிட் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்புக்கு ஏற்ப அந்த தொகையை இன்று அவரிடம் வழங்கினார். இதனை ஸாகிர் நாயக்கின் வழக்கறிஞர் டத்தோ அக்பர்டின் அப்துல் காதர் உறுதிப்படுத்தியதோடு நவம்பர் 2-ம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நவம்பர் 17-ம் தேதி அந்தத் தொகை வழக்குரைஞரின் கணக்கில் மாற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நவம்பர் 2ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஸீஸ் வழங்கிய தீர்ப்பில் டாக்டர் ஸாகிரை அவதூறாகப் பேசியதற்காக ராமசாமிக்கு 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டதோடு , மேலும் அவர் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளை அனுமதித்த பின்னர் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டார்.
இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருவித சமரசத்திற்கு வந்துள்ளனர், நாங்கள் மன்னிப்பில் கேட்பதை நிறுத்தி வைக்க செய்த விண்ணப்பத்தை செலவுகள் எதுவும் உட்படாத வகையில் திரும்பப் பெற விரும்புகிறோம் என டாக்டர் ராமசாமியின் வழக்கறிஞர் ரஸ்லான் ஹட்ரி சுல்கிஃப்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை வழக்கறிஞர் அக்பர்டினும் உறுதிப்படுத்தினார். எனினும் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள் ‘ரகசியமாக’ வைக்கப்பட்டுள்ளதாக அக்பர்டின் செய்தியாளர்களிடம் கூறினார்.