சுபாங் ஜெயா, மார்ச் 21 – தலைநகர், டாமன்சாராவிலுள்ள, பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணப் பையில், ஐந்து லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை பார்த்து, பாதுகாவலர் ஒருவர் மலைத்துப் போனார்.
அச்சம்பவம் தொடர்பில், 30 வயது மதிக்கத்தக்க அந்த பாதுகாவலரிடமிருந்து நேற்று புகார் கிடைத்ததை, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் உறுதிப்படுத்தினார்.
நேற்று காலை மணி எட்டு வாக்கில், பணக் கட்டுகள் அடங்கிய அந்த பயணப் பை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பையில், ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்பிலான, 50 மற்றும் நூறு ரிங்கிட் பணக்கட்டுகள் நிரப்பப்பட்டிருந்தன.
அவை அசல் பண நோட்டுகள் என நம்பப்படுகின்றது. எனினும், நம்பகத்தன்மையை உறுதிச் செய்துக் கொள்ள, பேங்க் நெகாராவின் உதவி நாடப்பட்டுள்ளதாக ஹசான் சொன்னார்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு ஆராயப்பட்ட போதிலும், அதிலிருந்து தகவல் எதையும் பெறமுடியவில்லை.
அதனால், ஐந்து லட்சம் ரிங்கிட்டை இழந்து தவிக்கும் நபர் யாராக இருந்தாலும், பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.