
லாரெடோ, ஜூன்-18 -அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் லாரடோவில் உள்ள நெடுஞ்சாலையில் அறுவர் பயணம் செய்த ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், விமானத்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கத் தங்கள் வாகனங்களை விட்டு அவசரமாக வெளியே ஓடிவந்ததால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் டெக்சாஸ்-மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள ‘ (Loop 20) நெடுஞ்சாலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளாதாக லாரடோ போலீஸ் துறையின் அதிகாரி ஜோஸ் பேசா தெரிவித்தார்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணை நடைபெற்று வருவதோடு , உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
விபத்து நடந்தபோது உயிரிழந்தவர்கள் விமானத்திற்குள் இருந்தார்களா அல்லது சாலையில் இருந்தார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விமானம் நெடுஞ்சாலையில் வேகமாகச் சறுக்கிச் சென்று, மின்விளக்குக் கம்பம் ஒன்றின் மீது மோதித் தீப்பிடித்து எரிவது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வாகனத்தின் டாஷ்போர்டு கேமரா காட்சிகளில் காணமுடிந்தது.
இதற்கிடையில், விமானத்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கச் சிலர் பெரிய சுத்தியல்கள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி விமானியின் அறையின் ஜன்னலை உடைக்க முயன்றதும் தெரியவந்தது.



