![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-05-07-PM-1175.jpg)
கோலாலம்பூர், ஜூன் 5 – இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்திருந்தாலும், தற்போதைக்கு டெங்கி தடுப்பூசியை கட்டாயமாக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
மாறாக, பொது சுகாதார மையங்களில் இருந்து, Qdenga எனும் அந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதே சமயம், டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில், அரசாங்கம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமென, சுகாதார துணையமைச்சர் லுகனிஸ்மான் அவாங் செளனி தெரிவித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டு வாக்கில், நாட்டில் டெங்கி காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை சுழியமாக்கும் இலக்கை நோக்கி சுகாதார அமைச்சு முன்னேறினாலும், தற்போதைக்கு டெங்கி தடுப்பூசியை கட்டாயமாக்கும் எண்ணம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதை லுகனிஸ்மான் தெளிவுப்படுத்தினார்.
ஜப்பானிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Qdenga தடுப்பூசிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியது.
80 விழுக்காடு செயல்திறனை கொண்ட அந்த தடுப்பூசியை, நான்கு வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், நாட்டில் டெங்கிக் காய்ச்சலால் 31 பேர் உயிரிழந்த வேளை ; கடந்தாண்டு அதே காலகட்டத்தில் பதிவான 19 உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில் அது ஏறக்குறைய ஒரு மடங்கு அதிகமாகும்.