![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-11-Dec-2023-11-45-AM-752.jpg)
ஜொகூர் பாரு, டிசம்பர் 11 – ஜொகூர், தம்போயிலுள்ள, பேரங்காடி ஒன்றில், மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 114 அந்நிய நாட்டு தொழிலாளர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட பேரங்காடியில் அந்நிய நாட்டவர்கள் வேலை செய்வது குறித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது உள்நாட்டவர்கள் உட்பட இந்தோனேசியா, மியன்மார், வங்காளதேசம், பாகிஸ்தான், நேப்பாளம், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மொத்தம் 228 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில், 19 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்ட 106 ஆடவர்கள், 51 மியன்மார், 34 இந்தோனேசியர்கள், பத்து வங்காளதேசிகள், நேப்பாளத்தை சேர்ந்த எண்மர், இந்தியர்கள் மூவர் உட்பட இந்தோனேசிய பெண்கள் எண்மரும் கைதுச் செய்யப்பட்டதை, மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குனர் பஹாருடின் தயிர் உறுதிப்படுத்தினார்.
முறையான பயணம் ஆவணம் இல்லாதது, அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் கூடுதல் காலம் நாட்டில் தங்கி இருந்தது ஆகிய காரணங்களுக்காக அவர்கள் கைதாகினர். விசாரணைக்காகவும், மேல் நடவடிக்கைக்காகவும் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.