![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-21-at-11.56.30-AM.jpeg)
கோலாலம்பூர், டிசம்பர் 21 – அண்மையில், மலாக்காவிலுள்ள, ஹோம்ஸ்டே தங்குமிடத்தில், இலவசமாக வழங்கப்பட்ட சமையல் பொருட்கள், தரம் குறைந்தவை என கூறி பெண் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் தொடர்பில், அந்த ஹோம்ஸ்டே நிர்வாகி தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்பெண்ணுடன் மேற்கொள்ளப்பட்ட வாட்ஸ்அப் உரையாடலை அவர் தனது X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மலாக்காவிலுள்ள, சம்பந்தப்பட்ட ஹோம்ஸ்டேயில் தங்க, ஓர் இரவுக்கு 250 ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்படுவது வழக்கமாகும்.
அந்த ஹோம்ஸ்டேயில் தங்கும் வாடிக்கையாளர்களுக்காக, பிரத்தியேகமாக, தன்னார்வ அடிப்படையில், அரிசி, முட்டை உட்பட உப்பு, மஞ்சள் தூள், சீனி போன்ற இதர பொருட்களும் இலவச பயன்பாட்டுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.
எனினும், அந்த ஹோம்ஸ்டேயை ஓர் இரவுக்கு வாடகைக்கு எடுத்த நூருல் எனும் பெண், அந்த இலவச பொருட்கள் தரம் குறைந்தவை என கூறி வாதிட்ட சம்பவம், தம்மை அதிர்ச்சி அடைய செய்ததாக, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஹோம்ஸ்டே நிர்வாகி கூறியுள்ளார்.
அந்த பொருட்கள் தாம் செலுத்திய 250 ரிங்கிட் கட்டணத்திற்கு ஏற்புடையவை அல்ல என குற்றம்சாட்டிய நூருல், குறைந்தது பஸ்மதி அரிசியாவது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், தனது குடும்ப பெரிது என்பதால், வெறும் 12 முட்டைகள் போதாது எனவும் வாதிட்டுள்ளார்.
ஹோஸ்ட்டே கட்டணம், அந்த சமையல் பொருட்களை உள்ளடக்கி இருக்கவில்லை என்றாலும், தன்னார்வ அடிப்படையில், அவற்றை வழங்கி விட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட அந்த நிர்வாகி, இது நமக்கு தேவையா? என்ற மனநிலையில் உள்ளார்.