![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/ALPHABET-GOOGLE_PRIVACY-LAWSUIT_1717037391-780x470.webp)
கோலாலம்பூர், மே 30 – தனது முதலாவது தரவு மையம் மற்றும் மற்றும் மலேசியாவில் Google Cloud வட்டாரத்தை அமைக்க RM9.4பில்லியன் ரிங்கிட் அல்லது 2 பில்லியன் அமெரிக்க டாலரை கூகுள் முதலீடு செய்யவிருக்கிறது. பல்வேறு துறைகளில் 26,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 15.04 பில்லியன் ரிங்கிட் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட முதலீட்டான இந்தத் திட்டம், Greater கோலாலம்பூரில் உள்ள சைம் டார்பி சொத்துடமையின் எல்மினா வர்த்தக பூங்காவில் அமைக்கப்படும்.
கூகுளின் பிரபலமான டிஜிட்டல் சேவைகளான தேடல், வரைபடம் மற்றும் பணியிடம் போன்றவற்றை கூகுள் தரவு மையம் வழங்கும். அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பலன்களை கூகுள் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த விவேக திட்டம் செயல்படும்போது உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு சேவை செய்வதற்காக கூகுள் உருவாக்கிய தரவு மையங்களை இயக்கும் 11 நாடுகளில் மலேசியா இணைந்துகொள்ளும். மறுபுறம், Google கிளவுட் பகுதியானது, அதிக செயல்திறன் மற்றும் குறைந்த தாமதமான கிளவுட் உள்கட்டமைப்பு, பகுப்பாய்வு மற்றும் AI சேவைகளை பெரிய நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும்.
அதே நேரத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரத்தையும் இது பேணுகிறது. 2030 ஆம்ஆண்டுக்கான புதிய தொழில்துறை பெருந்திட்டம் கோடி காட்டியிருக்கும் டிஜிட்டல் லட்சியங்களை கூகுளின் முதலீடு கணிசமாக முன்னேற்றத்தை கொண்டுவரும் என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul Aziz தெரிவித்தார்.